மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்காக மதுபானம் விலை உயர்வா?- அமைச்சர் விளக்கம்
அத்திக்கடவு அவினாசி திட்டத்தை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைப்பார் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் சாலை விரிவாக்கம் குறித்து வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அத்திகடவு அவினாசி திட்டம் விரைவில் துவக்கப்படும். பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. சோதனை ஓட்டத்தின் போது தண்ணீர் வரத்து இல்லாமல் சற்று தொய்வு ஏற்பட்டது. திட்டத்தை ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் துவக்கி வைக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.
மகளிர் உரிமை தொகை வழங்குவதற்காகவே, மது பான விலை உயர்த்தப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த அவர், அயல்நாட்டு மதுபானங்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டிருப்பதாகவும், இதற்கும் மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கும் தொடர்பு இல்லை என்றார்.
அண்ணாமலை வெளியிட்ட அமைச்சர்களின் சொத்து பட்டியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, அவற்றை பார்ப்பது இல்லை, அதை பார்த்து கொண்டிருந்தால் வேலை செய்ய முடியாது, நாங்கள் எங்கள் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.