“மகளிருக்கு இலவச பேருந்து- சலுகை இல்லை, உதவி”
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதி ,மனிதவள மேம்பாடு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு 643 பயனாளிகளுக்கு 5 கோடி மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடன், ஆதிதிராவிடர் நலத்திட்ட கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உட்பட்ட 12 வகையான கடங்களுக்கான காசோலையை வழங்கினார்.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கம் தென்னரசு, “திமுக ஆட்சி தமிழகத்தில் அமையும் போதெல்லாம் மகளிருக்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு ஏழு லட்சம் கோடி கடனுதவி வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழு கடன் மாணவர்களுக்கான கல்வி கடன் உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்கப்படும். கட்டணம் இல்லாத பேருந்து, மகளிருக்கு சலுகை அல்ல, செலவினங்களை மிச்சப்படுத்தும் சிறிய உதவி, மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி தர காத்திருக்கிறோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. அமித்ஷா பங்கேற்கும், திமுகவின் ஊழல்களை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சிக்கு தடை இல்லா மின்சாரம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.