தமிழ்நாட்டில் நடப்பது போன்றதொரு ஆட்சி இந்திய நாட்டுக்கு தேவை- மு.க.ஸ்டாலின்
பொதுமக்களுக்கு துன்பம் கொடுக்கும் ஆட்சி பாஜக ஆட்சி என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ ஏற்கனவே நாட்டில் 2 சட்டங்கள் இருக்கும்போது பொதுசிவில் சட்டம் எதற்கு? பொது சிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வர துடிக்கிறது. இன்று வள்ளலாரை பற்றி ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். பேசிகொண்டு அல்ல, உளறிக்கொண்டு இருக்கிறார். வள்ளலாரைப் பற்றி உளறிக் கொண்டு இருப்பவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். வள்ளலாரை பற்றி ஆழ்ந்த புரிதலுடன் பேசக்கூடியவர், அவரைப்பற்றி எழுதக்கூடியவர் மருத்துவர் ராஜமூர்த்தி. தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சியை உருவாக்க மக்கள் துணை நின்றார்கள். அது திராவிட மாடல் ஆட்சியாக நடக்கிறது. மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் திமுக ஆட்சி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் நடப்பது போன்றதொரு ஆட்சி இந்திய நாட்டுக்கு தேவை. ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பாஜக ஆட்சி, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக ஒன்றியத்தில் உள்ள பாஜக ஆட்சி மக்கள் விரோதப் போக்குடன் செயல்பட்டுவருகிறது. மதத்தை, சனாதனத்தை மக்களிடம் திணித்து ஒரு சர்வாதிகார ஆட்சியை பாஜக நடத்தி கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சியை எதிர்க்க கூடியவர்களையெல்லாம் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் பொதுசிவில் சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். பொதுமக்களுக்கு துன்பம் கொடுக்கும் ஆட்சி பாஜக ஆட்சி” என்றார்.


