சென்னை அமைந்தகரையில் 14 வயது சிறுமி சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 6 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை அமைந்தகரை மேத்தா நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது நிஷாத். இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மனைவி நாசியா. இத்தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், நிஷாத்தின் வீட்டில் தஞ்சையை சேர்ந்த 14 வயது சிறுமி, வேலை செய்து வந்தார். கடந்த நவம்பர் 1ஆம் தேதி வீட்டின் கழிவறையில் சிறுமி உயிரிழந்து கிடப்பதாக அமைந்தகரை போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலிசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, சிறுமியின் உடலில் காயங்கள் மற்றும் சிகரெட்டால் சூடு வைத்த காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த போலிசார், இது தொடர்பாக முகமது நிஷாத் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முகமது நிஷாத், அவரது மனைவி, நண்பர் லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி ஆகியோர் சேர்ந்து சிறுமியை கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்றது தெரியவந்தது. தீபாவளி தினத்தன்று 6 பேரும் தாக்கி கொன்றுவிட்டு, வீட்டிலிருந்து தப்பியோடியதும் தெரியவந்தது.
இதனை அடுத்து, முகமது நிஷாத், அவரது மனைவி நாசியா, கொலையில் தொடர்புடைய நிஷாத்தின் நண்பர் லோகேஷ், அவரது மனைவி ஜெயசக்தி (24), முகமது நிசாத்தின் அக்கா சீமா (39), முகமது நிசாதின் வீட்டில் பணி பெண்ணாக பணிபுரிந்து வந்த மகேஸ்வரி (44) ஆகிய 6 நபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு 16 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறுமி கொலையில் தொடர்புடைய 6 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன் பேரில்,6 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.