தென்தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185வது பிறந்தநாள் விழ, தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது” – என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாக, தென் தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், முல்லைப் பெரியாறு அணையினைப் பெருமுயற்சியோடு கட்டி, அப்பகுதி மக்களின் பஞ்சம் – பசி நீக்கிய பென்னிகுவிக் பெருமகனாரின் குடும்பத்தினரைக் கடந்த ஆண்டு இங்கிலாந்து பயணத்தின்போது சந்தித்திருந்ததாகவும், பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளையொட்டி, இந்த ஆண்டு அவர்களே நம் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள செய்தி கண்டு மகிழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


