அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க்ககூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2017 முதல் 2022ஆம் ஆண்டு வரை புகார்கள் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு, எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், தனது மனு மீது விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் அளித்த விண்ணப்பம் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், ஒரு வாரத்தில் இந்த விண்ணப்பம் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.