விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சி பாஜக- ப.சிதம்பரம்
விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி பாஜக மட்டும் தான் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், “விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரே கட்சி பாஜக. ஒன்றிய அரசை விமர்சனம் செய்தால் உடனே காவல்துறையை வைத்து நடவடிக்கை எடுக்கிறார்கள். விமர்சனத்தை கூட சகித்துக்கொள்ள முடியாத அரசை நான் இப்போதுதான் பார்க்கிறேன். வெளிநாடுகளில், இந்திய அரசை குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை சிலர் பரப்புகிறார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். வெளிநாடு சென்றால் மௌனமாக இருக்க வேண்டுமா? இந்தியாவை பற்றி வெளிநாடுகளில் ராகுல்காந்தி தவறாக பேசவில்லை” என்றார்.

ராகுல்காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். ஏற்கனவே பல வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ் பற்றியும் சரமாரியாகத் தாக்கி கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரக்கூடிய சமயத்தில் காங்கிரசின் இதுபோன்ற செயல்பாடுகள் பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.