அவசர சிகிச்சைப் பிரிவில் வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் விக்னேஷ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருபவர் மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன். இவர் நேற்று மருத்துவமனையில் பணியில் இருந்தபோது, விக்னேஷ் என்கிற இளைஞர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார். தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலம் முழுவதும் 7,900 மருத்துவமனைகள் மற்றும் 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு நேற்று நிறுத்தப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுமென தெரிவிக்கப்பட்டது. அதன்படியே நேற்று மருத்துவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(30) என்கிற இளைஞர் நேற்றைய தினம் ( நவ.14) சென்னை கலைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பித்தப்பை கல் பிரச்சனை மற்றும் கடுமையான வயிற்று வலிக்காரணமாக ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர், அங்கு அதிகளவு பணம் செலுத்த முடியாததால் நேற்று கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். மருத்துவ பரிசோதனைக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை முறையாக பரிசோதிக்காமல், பொதுப்பிரிவுக்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷின் உடல்நிலை மோசமானதால், மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போதிய மருத்துவர்கள் இல்லாததால் தான் இளைஞர் விக்னேஷ் உயிரிழந்துவிட்டதாகக் கூறி விக்னேஷின் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது கூட அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் வரவில்லை எனக்கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கிண்டி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.