பிரதமருக்கு கம்பீரம் தந்த கேமோ ஆடை திருப்பூரில் தயாரானது!
பிரதமர் மோடி திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணியை அணிந்தது பெருமையாக இருப்பதாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி முதல் நாள் சென்னையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது நாள் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள பாகன் தம்பதிகளான பொம்மன் பெள்ளி ஆகியோரை சந்தித்து உரையாடினார் . அப்போது அவர் அணிந்து வந்திருந்த கேமோ ப்ளாஜ் டீ சர்ட் உடையில் அவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

ராணுவ மிடுக்கில் பிரதமர் மோடி உடை அணிந்திருந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவை திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. திருப்பூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சென்னை சில்க்ஸ் குழுமத்தின் என் சி எம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கேமோ பிளாஜ் டீசர்ட் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து எஸ் சி எம் நிறுவன நிர்வாக இயக்குனர் பரமசிவம் கூறுகையில், “கடந்த 15 ஆண்டுகளாக கேமோ டீ சர்ட் மற்றும் பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 5 நாடுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது பாரத பிரதமர் தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட உடையை பெங்களூரில் உள்ள டெகாத்லான் ஷோரூமில் இருந்து பெற்றிருப்பது தெரிய வருகிறது. காடுகளில் செல்கிறவர்கள் மற்றும் சுற்றிப்பார்க்க செல்கிறவர்கள் மலையேற்ற பயிற்சி மேற்கோள்கொள்பவர்களுக்கு ஏற்ற வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளது. வியர்வை தேங்காத வகையில் இயற்கையை பறைசாற்றும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த வகையிலான உடையை பிரதமர் மோடி அணிந்து சென்றிருப்பது சென்னை சில்க்ஸ் குழுமத்திற்கும், திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை” என்றார்.