திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கும் போதை பொருள் கடத்தலில் தொடர்பா? சசிகலா
சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் கட்சியை சேர்ந்தவர்கள் மீது ஒரு நடவடிக்கை எடுக்கக்கூட துணிச்சல் இல்லாததை பார்க்கும்போது, திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கும் போதை பொருள் கடத்தலில் ஏதும் தொடர்பு இருக்குமோ? என மக்கள் கேள்வி எழுப்புவதாக சசிகலா சாடியுள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்பதை திமுக தலைமையிலான அரசு ஒவ்வொரு நாளும் நிரூபித்துக்கொண்டு இருப்பதை நம்மால் கண் கூடாக பார்க்கமுடிகிறது. அதிலும் ஆளும்கட்சியான திமுகவினரே சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை மெய்ப்பிக்கும் வகையில் தொலைக்காட்சிகளிலும், நாளேடுகளிலும் வரும் செய்திகளே சாட்சியாக இருக்கிறது.
தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவினர் அளித்த தகவலின் அடிப்படையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் திமுகவை சேர்ந்த விழுந்தமாவடி ஊராட்சி மன்றத் தலைவரான மகாலிங்கம் என்பவரையும், அவரது மகனும், திமுகவின் ஒன்றிய குழு உறுப்பினருமான அலெக்ஸ் என்பவரையும் தமிழக காவல்துறையினர் கைது செய்திருப்பதாக வரும் செய்திகள் நாட்டிற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளன.
இதேபோன்று கடந்த ஆண்டு 360 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக திமுகவை சேர்ந்த கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு கவுன்சிலர் சர்ப்ரைஸ் நவாஸ் மற்றும் முன்னாள் திமுக கவுன்சிலர் ஜெய்னுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எனவே, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக திமுகவினர் கைது செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
போதை பொருள் இளம் சமுதாயத்தினரின் வாழ்வை சீரழிக்கின்ற நடமாட்டத்தைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆளும் சேர்ந்தவர்களே இன்றைக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு பாதுகாக்கப்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. இது மிகவும் அபாயகரமானது. தமிழக மக்களுக்கும் பேராபத்தை அளிக்கக்கூடியது. மேலும், நாட்டின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருக்கிறது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில் துணிச்சலோடு செயலாற்றியும், ஸ்காட்லான்ட் காவல்துறைக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை இன்றைக்கு எதையும் கண்டும் காணாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது. தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தகவல் அளித்த பிறகுதான் இங்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்ய வேண்டிய நிலையில் தமிழக காவல்துறை மெத்தனமாக இருக்கிறது. தமிழக காவல்துறை ஆளும்கட்சியினரின் அழுத்தங்களுக்கு உள்ளாகி இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிற திமுகவினரை கண்டும் காணாமல் இருக்கிறதா? என்பதும் தெரியவில்லை.
திமுகவினருக்கு இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட எங்கிருந்து துணிச்சல் வருகிறது. எப்படிப்பட்ட தவறுகள் செய்தாலும் அதிலிருந்து எளிதில் தப்பித்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இன்றைக்கு திமுகவினர் உலா வருகிறார்கள். திமுகவில் மேல்மட்டத்தில் இருப்பவர்களின் பரிபூரண ஆசீர்வாதத்தால் இது போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறதா? என்பதும் தெரியவில்லை. இதுபோன்று, போதை பொருள் கடத்தலில் சம்பந்தபட்ட திமுகவினரை கைது செய்து இரண்டு தினங்கள் ஆனபோதும் அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கூட ஏன் முன் வரவில்லை? என்று தெரியவில்லை. அதேபோன்று, உள்ளாட்சி அமைப்புகளில் அவர்கள் வகிக்கும் பதவியிலிருந்தும் ஏன் இன்னும் நீக்கப்படவில்லை? என்பதும் தெரியவில்லை.
எனவே, சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் கட்சியை சேர்ந்தவர்கள் மீது ஒரு நடவடிக்கை எடுக்கக்கூட துணிச்சல் இல்லாததை பார்க்கும்போது, திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கும் போதை பொருள் கடத்தலில் ஏதும் தொடர்பு இருக்குமோ? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். திமுகவால் சொந்த கட்சியினரையே கட்டுப்படுத்தமுடியவில்லை. இந்த நிலையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு என்பது கேள்விக்குறியாகிவிட்டது. அதேபோன்று தமிழக மக்களின் பாதுகாப்பும் இன்றைக்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களைத்தான் திமுகவின் இரண்டாண்டு சாதனையாக பார்க்கமுடிகிறது. எனவே, போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை, இரும்பு கரம் கொண்டு முற்றிலும் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.