செந்தில் பாலாஜி வழக்கு- 3வது நீதிபதி நியமனம்
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி பானு, செந்தில்பாலாஜி கைது சட்டவிரோதம், உடனே விடுவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்ரவர்த்தி சிகிச்சை முடிந்தபின், குணம் அடைந்தபின் செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க வேண்டும் எனக்கூறி செந்தில்பாலாஜி மனைவி மேகலா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட தலைமை நீதிபதிக்கு இரு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர். அதன்படி, செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கை மூன்றாவதாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா அறிவித்துள்ளார். செந்தில்பாலாஜி சட்டப்படிதான் கைதா? அல்லது கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதா? என மூன்றாவது நீதிபதி விசாரிப்பார். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு தகுந்ததா என்பது பற்றியும் மூன்றாவது நீதிபதி விசாரித்து தீர்ப்பு அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை நாளை அல்லது நாளை மறுநாள் நீதிபதி சி.வி கார்த்திகேயன் விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.