மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தின் உரிமைகள் மற்றும் மக்கள்தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் ஆதரவு பெறாமல் தோல்வியடைந்தது. இதையடுத்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பல்வேறு இடங்களில் மகிழ்ச்சி தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, மல்லாங்கிணற்றில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும், இந்த மசோதா தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் அபாயம் இருந்ததாகவும், தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்து போராடியதன் பலனாக இந்த மசோதா தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி தெரிவித்தனர்.
