சென்னையில் வேக கட்டுப்பாடு- பின் வாங்கிய காவல்துறை
சென்னையில் 40 கிலோமீட்டர் வேக கட்டுப்பாடு என்ற அறிவிப்பு பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் பகல் நேரத்தில 40 கிலோமீட்டர் வேகத்தையும் இரவு நேரங்களில் 50 கிலோமீட்டர் வேகத்தையும் மீறி வாகனம் ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்காக 10 பிரதான சாலையில் ரூ.54.55 லட்சம் செலவில் ஸ்பீட் ரேடார் கன் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.சாலை விபத்துக்களை குறைக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காரணம் ஸ்கூட்டி ரக வாகனங்களே சர்வ சாதாரணமாக 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது, ஆண்கள் ஓட்டும் மற்ற வாகனங்களை சென்னை போன்ற பெருநகரங்களில் 40 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவது என்பது பெரும் எரிச்சல் என்றே வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆய்வு செய்வதற்காகவே கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, தற்போது அபராதம் விதிக்கப்படாது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிற பெருநகரங்களுடன் ஒப்பிட்டு அதற்கேற்ப வேக கட்டுப்பாடு விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு வரம்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் அபராதம் என சொல்லிவிட்டு, பின் அபராதம் விதிக்கப்படாது என குழப்பும் காவல்துறையினரால் வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்தியில் மூழ்கியுள்ளனர்.