ஈரோடு அரசு மருத்துவமனையில், வீல் சேர் மற்றும் ஸ்டெரச்சர் இல்லாமல் மூதாட்டியை மகள் தூக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களிடம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அம்பிகா விசாரணை நடத்தினார். மேலும் சம்மந்தப்பட்ட நோயாளியின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்.
ஈரோடு பெரிய வலசை பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி வேலை நிமித்தமாக கடந்த 27ஆம் தேதி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியதில் மூதாட்டியின் காலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் மூதாட்டியை மீட்டு அவரது மகள் வளர்மதி ஆட்டோ மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
அப்போது ஊழியர்கள் ஸ்ட்ரச்சர் மற்றும் வீல் சேர் தராததால் மூதாட்டியை அவரது மகள் ஸ்வர்ணம் தூக்கி சென்றது சமூக வலைதளங்களில் வைரலானது. அதனால் பெரும் சர்ச்சையாக மாறியது.
மேலும் மூதாட்டியை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லுமாறு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா விடம் கேட்டபோது அரசின் மருத்துவமனையில் உரிய விசாரணை நடத்தப் போவதாகவும் மேலும் சம்மந்தப்பட்ட கண்காணிப்பாளர் மற்றும் ஆர்.எம்.ஓ ஆகிய இருவருக்கும் மெமோ அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காலை முதல் ஈரோடு அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் மூதாட்டியின் மகள் வளர்மதி இணை இயக்குனரிடம் நடந்தவற்றை விவரித்துள்ளார்.
காலில் ஏற்பட்ட காயத்திற்காக எக்ஸ்-ரே எடுத்த பின் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல ஊழியர்களிடம் கேட்டும் அவர்கள் சக்கர நாற்காலியோ, ஸ்ட்ரச்சரோ தரவில்லை என மூதாட்டியின் மகள் வளர்மதி கூறினார்.
இதனிடையே இந்த விசாரணை தொடரும் என தெரிவித்துள்ள இணை இயக்குனர் அம்பிகா, விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.