உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்று கோப்பை வென்று திரும்பிய தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலத்தீவில் 15வது உலக ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, கஜகஸ்தான் உள்பட 36 நாடுகளில் இருந்து ஏராளமான ஆணழகன்கள் பங்கேற்றனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து மட்டும் 34 பேர் கலந்து கொண்டனர். 60 கிலோ எடை பிரிவில் சேலத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் 4வது இடத்தை கைப்பற்றினார். 80 கிலோ எடை பிரிவில் கன்னியாகுமரியை சேர்ந்த ஜிஜோ மரியோ வெள்ளி பதக்கமும், 90 கிலோ எடை பிரிவில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் தங்க பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.
இதேபோல் சாம்பியன் ஆப் சாம்பியன் போட்டியிலும் நாமக்கலை சேர்ந்த சரவணன் ஏற்கனவே தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் உலக ஆணழகன் போட்டியில் அவர் 2 வது முறையாக தங்கப் பதக்கங்களை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆணழகன் போட்டியில் கோப்பை வென்ற வீரர்கள், மாலத்தீவில் இருந்து கொழும்பு வழியாக் சென்னை திரும்பினார். இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு , தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க சேர்மன் மற்றும் அரசு சார்பில் நிர்வாகிகள் உற்சகமாக வரவேற்பளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உலக ஆணழகன் பட்டம் வென்ற சரவணன், “எனக்கு உடலில் அடிப்பட்டு விட்டது. இதனால் உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்க விருப்பம் இல்லாமல் இருந்தேன். ஆனால் போட்டியில் பங்கேற்க வேண்டும் என அனைவரும் ஊக்கம் தந்தனர். 90 கிலோ எடை பிரிவிலும் , சாம்பியன் ஆப் சாம்பியன் பிரிவிலும் தங்கம் வென்றேன். போட்டி இந்த முறை கடுமையாக இருந்தது. கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் வீரர்கள் மோதுவது மிகவும் கடினமாக இருந்தது” என்றார்.
தொடர்ந்து தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்க சேர்மன் அரசு கூறுகையில், “மாலத்தீவில் நடந்த போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் வென்று உள்ளனர். இந்தியாவில் உலக ஆனழகன் போட்டியை 2வது முறையாக சரவணன் வென்று பெருமை சேர்த்து உள்ளார். தமிழ் நாடு அரசு பல்வேறு வகையில் ஊக்கம் அளித்து உள்ளது. தமிழ் நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டில் ஆணழகன் வீரர்களையும் இணைப்பதாக கூறி உள்ளது.
எல்லா விளையாட்டு போட்டிகளில் கஷ்டங்கள் உள்ளன. ஆனால் ஆணழகன் போட்டியில் அதிகமாக கஷ்டம் இருக்கும். உணவு பழக்கங்கள் கடைபிடிக்க வேண்டும். பொருளாதார உதவிகள் கிடைத்தால் தமிழ் நாட்டில் அதிகமானவர்கள் ஆணழகன் போட்டிகளில் பங்கேற்க முடியும். தமிழ் நாட்டை சேர்ந்த 2 பேர் உலக ஆணழகனாக இருப்பது பெருமை. அரசு உதவிகள் செய்தால் மாவட்டங்களில் உள்ளவர்களும் அதிக ஆர்வத்துடன் வருவார்கள்.
சரவணனுக்கு வருமான வரி துறையில் பணி கிடைத்து உள்ளது. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பணியிடங்கள் கிடைக்க கூடிய விரைவில் நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். பஞ்சாப் உள்பட சில மாநிலங்களில் போலீஸ் உள்பட மாநில அரசு பணிகளில் சேர்க்கப்படுகின்றனர். அதுபோல் தமிழ்நாடு அரசும் செய்தால் இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள். இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க விளையாட்டு முக்கியமானது” என்று அவர் கூறினார்.