49-வது சென்னை புத்தகக் காட்சியை வரும் ஜனவரி 8ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நடப்பு ஆண்டு புத்தக திருவிழாவில் வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளதாக பபாசி தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.


49-வது சென்னை புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி. ஏ மைதானத்தில் 2026ஆம் ஆண்டு ஜனவரி 8 முதல் 21 வரை நடைபெறுகிறது. புத்தக கண்காட்சி தொடக்க விழா மற்றும் பபாசி விருது பெறுபவர்கள் குறித்து பபாசி தலைவர் சண்முகம் மற்றும் குழுவினர் சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சென்னை நந்தவனத்தில் 49-வது சென்னை புத்தக கண்காட்சியை ஜனவரி 8ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்க உளளதாகவும், அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தனர். 49வது புத்தக திருவிழா 8.1.2026 முதல் துவங்கி 21.1.2026 வரை 14 நாட்கள் நடைபெற உள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருதும் இந்த ஆண்டும் 6 பேருக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

49வது புத்தக திருவிழாவில் 15 முதல் 20 லட்சம் வரை வாசகர்கள் வருவார்கள் என்றும், ஆனால் 25 லட்சம் வரை வாசகர்களை வரவழைப்பது தான் தங்களின் நோக்கம் எனவும், வாசகர்களுக்கான குடிநீர், கழிப்பறை மற்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர். புத்தக திருவிழாவில் வாசகர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.10 என்று இருந்ததை மாற்றி இலவச அனுமதி வழங்கவும் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தனர். புத்தக திருவிழாவின் 14 நாட்களும் சிறந்த பேச்சாளர்கள், நிபுணர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியும், பல்வேறு மாநிலங்களில் இருந்து புகழ்பெற்ற பல பப்ளிகேஷன்ஸ் கலந்துகொள்ள இருப்பதாகவும் பபாசி நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.

புத்தக திருவிழா துவங்கும் 8.1.2026 அன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் பொற்கிழி விருதை வழங்குகிறார். அத்துடன் 1 லட்சம் ரூபாயையும் வழங்குகிறார். அதன்படி, கவிதை – கவிஞர் சுகுமார், சிறுகதை – ஆதவன் தீட்சண்யா, நாவல் – இரா. முருகன், உரைநடை – பேராசிரியர் பாரதி புத்திரன் ( சா. பாலுச்சாமி), நாடகம் – கருணா. பிரசாத், மொழிபெயர்ப்பு – வ. கீதா ஆகியோருக்கு கலைஞர் பொற்கிழி விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு 14 நாட்கள் நடக்கும் திருவிழாவில் 1000 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பல்வேறு விதமான புதிய புத்தகங்கள் கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், வாசகர்களுக்கான பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பபாசி நிர்வாகிகள் கூறினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வசதிகள் மேம்படுத்த திட்டமிட்டு வருவதாகவும், 25 லட்சம் பேரை புத்தகத் திருவிழாவிற்கு வரவழைப்பது தான் தங்கள் நோக்கம் என்றும் குறிப்பிட்டனர். கடந்த முறையை விட இந்த முறை 2 மடங்கு வாசகர்கள் வருகை அதிகரிக்கவும் முயற்சி செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். புதிய படைப்புகளை கொண்டு வரும் முயற்சியில் அனைத்து பதிப்பகங்களும் முயற்சி செய்து வருவதாகவும், கடந்த முறை இருந்த சில பிரச்சினைகளை இந்த முறை சரிசெய்ய திட்டமிடல் செய்திருப்பதாகவும் பபாசி நிர்வாகிகள் கூறினர். மேலும், மாணவர்களுக்கு கதை சொல்லுதல், எழுதுதல், வார்த்தை விளையாட்டு போன்றவற்றை இந்த முறை புதிதாக ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.


