திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த மூர்த்திக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது.


திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 668 காளைகளும்,334 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி போட்டியை கண்டு ரசித்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியின் முடிவில் 12 மாடுகளை பிடித்த சூரியூரை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சார்பில் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த யோகேந்திரன் 11 மாடுகளை பிடித்து இரண்டாம் பரிசான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெற்றார். புதுக்கோட்டை நல்லதங்கால்பட்டியை சேர்ந்த கார்த்தி 7 மாடுகளை பிடித்து மூன்றாம் பரிசை பெற்றார்.
சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 63 பேர் காயமடைந்தார். அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். 9 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


