வட இந்தியாவில் திமுக பற்றி திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவருகிறது- திருமா
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 60வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி சென்னையில் லிபர்டி மாரத்தான் நடத்தப்படுகிறது. இதற்கான இணையதள பதிவு, டி.சார்ட் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொல்.திருமாவளவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “சாதி ஒழிப்பு பற்றி பேசுகிறோம். ஆனால் சாதி பிண்ணனி குறித்து ஆராய்ந்தால் தான் புரிந்து கொள்ள முடியும். புத்தர் சொன்ன கருத்துகள் கூட பிரிவினைவாதத்தை நோக்கி சென்றுவிட்டது. போலிகள், பொய்யான செய்திகள் உலவுகிறது. வதந்திகள் பரவுகிறது. இவற்றை களத்தில் நேரிடையாக இருந்ததால் புரிந்து கொள்ள முடியும். போராடி கொண்டு இருக்க வேண்டும். மக்களிடம் பணியாற்றி கொண்டே இருக்க வேண்டும். விமானத்தில் என்னுடன் பயணம் செய்த வட இந்தியர் ஒருவர் நீங்கள் தமிழ்நாடா என்று பேசத் தொடங்கினார்.

தமிழ்நாட்டில் இந்து கோவில்களை உடைக்கிறீத்களே என கேட்டார். நாங்கள் ஏன் உடைக்கிறோம் என்றேன். வட இந்தியாவில் சமூக வலைதளங்களில் திமுக அரசு இந்துகளுக்கு எதிரானது. கோவில்கள் இடிக்கப்படுவதாக நிறைய பகிரப்பட்டு வருவதாக கூறினார். சமூக வலைதள தகவலை மட்டும் நம்ப வேண்டாம். தவறான தகவல் என கூறினேன். மன்னர்கள் தான் வர்ணசனத்தை உருவாக்கினார்கள். பிரமாணர்கள் செய்யவில்லை என தெரிவித்தார். என்னை அவருக்கு தெரியவில்லை. இதனால் நாம் எல்லா தளங்களில் வேலை செய்ய வேண்டும். அடுத்த தலைமுறையை நோக்கி செல்ல வேண்டும். புதிய இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என அம்பேத்கார் நினைத்தார். மோடி கூட புதிய இந்தியா என சொல்கிறார். பழைய இந்தியாவில் சமத்துவம் இல்லை. சனாதான இந்தியா. சகோதரத்துவம் இல்லை. சமத்துவத்திற்காக ஒடுவோம்” என்றார்.


