Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரி சிறுமி கொலை தலைகுனிவை ஏற்படுத்தியுளது - திருமாவளவன் அறிக்கை!

புதுச்சேரி சிறுமி கொலை தலைகுனிவை ஏற்படுத்தியுளது – திருமாவளவன் அறிக்கை!

-

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் நடந்துள்ள பாலியல் குரூரம் தலைகுனிவை ஏற்புடுத்தியுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் நடந்துள்ள பாலியல் குரூரம் தலைகுனிவை ஏற்புடுத்தியுள்ளது.
பால்மணம் மாறாத பச்சிளம் சிறுமியை வல்லுறவுக்கு ஆளாக்கி வதைத்துப் படுகொலை செய்து, அந்தப் பிஞ்சு உடலை சாக்குத் துணியில் கட்டி சாக்கடையில் வீசியுள்ளது ஒரு கும்பல். ஐம்பது வயது முதிர்ந்த நபரும் இந்த கொடுஞ்செயலில் ஈடுப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடூரத்தை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. போதைப் பொருள்களின் புழக்கம் தான் இத்தகைய கேவலத்திற்குக் காரணமென கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுவை காவல்துறை இருவரைக் கைதுசெய்துள்ளது. அரசின் கடமை முடிந்தது. அவ்வளவு தான். இந்நிலையில் எப்படி இத்தகைய கொடுங்குற்றங்களைக் கட்டுப்படுத்துவது?

மது, கஞ்சா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றாக அழித்தொழிப்பதில் இந்திய ஒன்றிய அரசும் அனைத்து மாநில அரசுகளும் தேசிய அளவில் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியது இன்றியமையாத தேவையாகும். இதனை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயலாற்றிட வேண்டும்.  இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு பரப்புரைகளை ஒன்றிய – மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. படுகொலையான சிறுமியின் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பும் வழங்கிட வேண்டுமென புதுவை மாநில பாஜக- என்ஆர் காங்கிரஸ் அரசை விசிக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ