அக்.9-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது!
அக்டோபர் 9 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, “நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாடு பேரவையிலும் நிறைவேற்றப்படும். பாஜக அரசு 2014- ஆம் ஆண்டே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயற்சி எடுத்திருந்தால் தற்போது அமலுக்கு வந்திருக்கும். தற்போது தேர்தலை மனதில் வைத்தே பாஜக அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகையால் தமிழ்நாட்டில் 1.06 கோடி பேர் பயன்பெறுகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தால் பெண்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும். நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவதுதான் மரபு, ஆனால் நேற்று ஜனாதிபதி அழைக்கப்படவில்லை. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கும் ஜனாதிபதி அழைக்கப்படவில்லை. அக்டோபர் 9 ஆம் தேதி 2023-2024 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானியக் கோரிக்கைகள் சமர்பிக்கப்பட உள்ளன” என்றார்.