தீபாவளியை முன்னிட்டு கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றம் செய்து தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வர்கள் என்பதால், தாம்பரம் வெளிவட்ட சாலை மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, அக்.17,18 மற்றும் 21,22 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் அறிவித்துள்ளது. அத்துடன் கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை மற்றும் புறப்பாடுப் பயண விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை நோக்கிச் செலும் வாகனங்கள் விரைவக செல்லவும், நகரில் நெரிசலைத் தவிர்க்கவும் , பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக , தாம்பரம் மாநகர காவல்துறை, பின்வரும் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான வழித்தட மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது.
அக்.17 மற்றும் அக்.18 பிற்பகல் 2 மணி வரை:
* சென்னை மற்றும் ஆவடி பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள்; பூந்தமல்லியிலிருந்து திருப்பிவிடப்பட்டு – ஸ்ரீபெரும்புதூர் – திருவண்ணாமலை – திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
*மதுரவாயல் பகுதியில் இருந்து தாம்பரம் ஜிஎஸ்டி நோக்கி வரும் கனரக வாகனங்கள், மதுரவாயலில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் – காஞ்சிபுரம்- திருவண்ணாமலை – திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
*காஞ்சிபுரத்திலிருந்து வாலஜாபாத் வழியாக ஓட்டேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள், ஒரகடம் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் – திருவண்ணாமலை – திருக்கோவிலூர் வழியாக ஜிஎஸ்டி சாலையை அடைந்து தங்கள் இலக்கை அடையலாம்.
திரும்பும் பயணம் :
அக்.21 மற்றும் அக்.22ம் தேதி பிற்பகல் 2 மணி வரை :
* செங்கல்பட்டு வழியாக வரும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலை -> வாலஜாபாத் -> காஞ்சிபுரம் -> ஸ்ரீபெரும்புதூர் வழியாக -> பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம்.
* சிங்கப்பெருமாள் கோவில் வழியாக வரும் கனரக வாகனங்கள், ஒரகடம் -> ஸ்ரீபெரும்புதூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டு -> பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம் .
இருப்புலியூர் பாலத்தின் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக கனரக வாகங்கள், வண்டலூர் வெளிவட்டச் சாலை மற்றும் மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
=>அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில், விடுமுறை முடித்து நகரத்திற்குள் திரும்பும் பயணத்தை விரைவுபடுத்த , காட்டாங்குளத்தூர், மறைமலை மற்றும் பொத்தேரி ரயில் நிலையங்களில் இருந்து , கூடுதல் புறநகர் இரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் இந்த ரயில் சேவைகளை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகளுக்கான முக்கிய வசதிகள் :
*புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு பயணிக்கும் பயணிகள், நெரிசலற்ற பயணத்திற்காக ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் வழித்தடங்களைப் புறப்பாடு மற்றும் திரும்பி வருதல் பயணத்திற்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரயில் போக்குவரத்து ஏற்பாடுகள் : சாலை நெரிசலை தவிர்க்க, சிறப்பு உள்ளூர் ரயில்கள் வழக்கமான இடைவெளியில் இயக்கப்படும். பயணிகள் இவற்ரை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பேருந்து ஏற்பாடுகள் : பயணிகள் வசதிக்காக, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து 2,092 சிறப்பு பேருந்துகள், அக்.16 முதல் அக்.19 வரை இயக்கப்பட உள்ளது. “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.