தமிழகத்தில் விவசாயத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள இடுபொருட்கள் மற்றும் உரத் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடி நடவடிக்கை வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் பெரும்பான்மையான பகுதியில் தற்போது சம்பா சாகுபடியும் காவேரி டெல்டா பாசன பகுதிகளில் தாளடி பருவ நெல்லும் பயிர் செய்யும் பருவ காலம் இது. இந்த சாகுபடிகளுக்கு விவசாயிகள் நெல் பயிர்களுக்கு அடி உரமாக டி.ஏ.பி, யூரியா போன்றவற்றை பயிர்கள் நடவின் போதும், நெல்பயிர்கள் வளர்ச்சி அடையும் சமயத்தில் காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் யூரியா மற்றும் சில இடுப்பொருட்களையும் நெல் பயிர்களுக்கு வழங்குவதன் மூலம் விவசாயிகள் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் இந்த பருவ காலத்தில் சிறப்பாக வளர்ச்சி அடைந்து விவசாயிகளுக்கு நல்ல மகசூலை தரும்.

ஆனால் தற்போது தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் விவசாய இடுபொருட்கள் மற்றும் உரம் ஆகியவை தட்டுப்பாடில் உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். விவசாயிகள் நெல் பயிர்கள் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளின் நெல் பயிர்களுக்கு உரம் போன்ற இடுபொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க கடந்த காலங்களில் கையாளப்பட்ட முறைகளை மாநில அரசு கவனத்தில் கொண்டு அதை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். அதைபோல் மத்திய அரசிடம் இருந்து கோரப்பட்ட விவசாய இடுபொருட்கள் மற்றும் உரங்களை தங்கு தடையின்றி உடனடியாக பெறுவதற்கு தமிழக அரசு உடனே முனைப்பு காட்ட வேண்டும் .
வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு அவர்கள் தேவைக்கேற்ப உரங்களையும் இடுபொருட்களையும் வழங்குவதற்கு துரித நடவடிக்கை செய்ய வேண்டும் .
வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தை பயன்படுத்திக் கொண்டும், தனியார் வேளாண்மை இடுபொருட்கள் விற்பனை மையங்கள் உரம் தட்டுப்பாட்டை காரணம் காட்டி அதிக விலைக்கு உரம் விற்பதாகவும், உரங்களுடன் சில பொருட்களை வாங்கினால் தான் உரம் தரப்படும் என விவசாயிகளை கட்டாயப் படுத்துகின்றனர் என விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.
இவைகளை எல்லாம் போக்க வேளாண்மை துறை அலுவலர்கள் ஆங்காங்கே தனியார் வேளாண்மை இடுபொருட்கள் விற்பனை நிலையங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரங்களும் இடுபொருட்களும் முறையான விலையில் தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக உரத் தட்டுப்பாட்டில் கவனம் செலுத்தி விவசாயிகளின் நெல் பயிர்கள் இந்த சம்பா பருவத்தில் சிறப்பாக வளர்ச்சி அடைந்து நல்ல மகசூல் அடைந்து விவசாயிகள் லாபம் அடைய வழி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
கோர்ட்டை ஏமாற்றி சிபிஐ விசாரணை? பரபரப்பு ஆர்டர்! நீதிபதி ட்விஸ்ட்! தராசு ஷ்யாம் நேர்காணல்!