தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து பேசவில்லை; உறுதியளிக்கவில்லை என ஃபாக்ஸ்கான் மறுப்பு: அரை நாளில் அம்பலமான திமுக அரசின் புளுகு என பாமக தலைவா் அன்புமணி விமர்சித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், அத்தகைய எந்த முதலீட்டையும் செய்வதாக உறுதியளிக்கவில்லை என்று ஃபால்ஸ்கான் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசு எத்தகைய மோசடிகளை செய்து வருகிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15000 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது. ’’ரூ.15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. இராஜா தெரிவித்திருந்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் ஒரு படி சென்று, ’’இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு. தமிழ்நாட்டைத் தேர்வு செய்தமைக்காகவும், எங்களுடன் இணைந்து எதிர்காலத்தை வடிவமைக்க முடிவெடுத்தமைக்காகவும் ஃபாக்ஸ்கானுக்கு நன்றி. தமிழ்நாட்டைத் தெற்காசியாவின் உற்பத்தி மற்றும் புதுமைக்கான மையமாக உயர்த்துவதற்கான நம் பயணத்தில் இது மற்றுமொரு மைல்கல்!” என்று தனக்குத் தானே பாராட்டிக் கொண்டிருந்தார். ஆனால், திமுக அரசு கட்டி எழுப்பிய இந்த பொய் பிம்பங்கள் அனைத்தும் அரை மணி நேரத்தில் நொறுங்கி விட்டன.
இது தொடர்பாக ஃபாக்ஸ்கான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’ தமிழக முதலமைச்சர் அவர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சந்தித்து பேசியது உண்மை. ஆனால் இந்த சந்திப்பின் போது எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை; உறுதியளிக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்வார்கள். ஆனால், திமுக அரசின் புளுகு அரை நாளில் அம்பலமாகியிருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு மட்டும் தான் என்று இல்லை. தொழில் முதலீடுகள் குறித்த திமுக அரசின் அறிவிப்புகளில் 90% அறிவிப்புகள் பொய் மூட்டைகள் தான். அதனால் தான் திமுக ஆட்சியில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதை செய்ய திமுக அரசு மறுக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர், கூகுள் நிறுவன உயரதிகாரிகளை சந்தித்துப் பேசியதாகவும், அதன் மூலம் கூகுள் நிறுவனத்தின் முதலீடுகள் தமிழ்நாட்டில் குவியப் போவதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆனால், தமிழ்நாட்டை திரும்பிக் கூட பார்க்காத கூகுள் நிறுவனம் ரூ.1.20 லட்சம் கோடியில் செயற்கை அறிவுத்திறன் மையத்தை ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் அமைக்கப் போவதாக இன்று அறிவித்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் திமுகவின் லட்சனம் இது தான். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்கி மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது. திமுக அரசின் இத்தகைய மோசடிகளை ஆதாரங்களுடன் கூடிய ஆவணமாக பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் வெளியிட்டு அம்பலப்படுத்தும்” என பாமக தலைவா் அன்புமணி விமர்சித்துள்ளாா்.
https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/82-thousand-people-applied-under-the-rte-act-this-year/18068