
மாநில அரசின் விசாரணைக்குள் தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா? என டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக்கில் அதிகள் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது, பார் உரிமம் வழங்குவதில் முறைகேடு என ரூ.1000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2017 – 2024 வரையிலான காலக்கட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சோதனைகளை மேற்கொண்டது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நிதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறையிடம் நீதிபதி சரமாரியான கேள்விகளை முன்வைத்தார். அப்போது, “அமலாக்கத்துறை என்ன நினைத்துக்கொண்டு செயல்படுகிறது?, மாநில விசாரணை அதிகாரித்தின் உரிமையை பறிக்க முயல்கிறதா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

மேலும், “சந்தேகம் இருந்தாலே அலுவலகத்துக்குள் நிழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வது எவ்வாறு சரியாகும்? மாநில அரசின் விசாராணைக்குள் தலையிடுவது கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா? ஒரு அதிகாரி தவறு செய்திருந்தால், அவரிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். சிபிஐ கூட சோதனை செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அரசிடம் முறையாக தகவல் அளிக்கிறது” என்றும் கண்டனம் தெரிவித்தார்.