வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் மிக்ஜாம் புயல் உருவானது. இந்த புயலினால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானது. அதனால் பொது மக்களின் பாதுகாப்பு காரணங்கள் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. புயலினால் ஏற்பட்ட தொடர் கனமழையால் மக்களின் இயல்பு நிலை பாதித்தது. மேலும் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். எனவே மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களையும் மீட்டு முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.
அது மட்டும் இல்லாமல் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது சென்னை விட்டு நகர்ந்துள்ள புயல் இன்று முற்பகல் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதனால் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த சென்னையில் மழையின் அளவு குறைந்து போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல் இயல்பாக செயல்பட தொடங்கி விட்டன. அந்த வகையில் கோயம்பேடு, தாம்பரம் பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஒவ்வொரு பகுதிகளுக்கும் மின்சாரம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன.