வால்பாறை அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்த புகாரில் தற்காலிக பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களில், வெளியூர் மாணவிகள் வால்பாறை அரசு மகளிர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையம் ஒருங்கிணைந்த சேவை மைய அதிகாரி கிருஷ்ணவேணி தலைமையிலான குழுவினர் வால்பாறை கல்லூரிக்கு வருகை தந்தனர்.
அவர்கள் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் 7 மாணவிகள் கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் சிலர் தங்களுக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக தெரிவித்தனர். இதனால் தங்களால் படிக்க இயலவில்லை,சொந்த ஊர்களுக்கே செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஒருங்கிணைந்த சேவை மைய அதிகாரிகள் வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் வால்பாறை கலைக்கல்லூரி மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளில் உள்ள மாணவிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் தற்காலிக பேராசிரியர்கள் 2 பேர், ஆய்வுக்கூட உதவியாளர், என்சிசி பயிற்சியாளர் ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்தது தெரியவந்தது. இதனை அடுத்து, 4 பேரையும் போலிசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.