தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமன வழக்கில் தமிழக அரசின் வாதங்களை கேட்காமல் ஆளுநருக்கு சாதகமாக அவசரம் அவசரமாக தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை அமர்வின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நீதிபதிகள் லட்சுமி நாராயணன் மற்றும் ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற விடுமுறை அமர்வு, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, “மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை விடுமுறை கால அமர்வு விசாரித்திருக்க கூடாது” என்றும், “உயர்நீதிமன்றம் அவசரம் அவசரமாக உத்தரவு வழங்கியுள்ளது” என்றும் விமர்சித்தது.
மேலும், மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உரிய அவகாசம் வழங்கப்படவில்லை என்றும், அரசின் வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதிக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தது. இதனால் நீதிமன்ற நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வாதிட்டது.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அல்லது உரிய அமர்வில் மீண்டும் புதிதாக விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 6 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும், அதை சென்னை உயர்நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் வில்சன் ஆகியோர் வாதாடினர். இதன் தொடர்ச்சியாக, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்திருந்த இடைக்கால தடை உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
ஆளுநருக்கு பதிலாக மாநில அரசே பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியிருந்தது. அந்த சட்டம் ஆளுநரின் ஒப்புதல் இன்றியே சட்டமாகிவிட்டதாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, தமிழக அரசின் சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், விடுமுறை நீதிமன்ற அமர்வு தடை விதித்தது. தற்போது அந்த உத்தரவு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.


