விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.


நடிகரும், தேமுதிகவின் நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் தலைமைக் கழக நிலையை செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் இருந்து தேமுதிக அலுவலகம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜயகாந்தின் நினைவிடத்தில் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை கஸ்தூரி, திரைத்துறையினர், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.


