வங்காளதேசத்தில் சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
அண்டை நாடான வங்காளதேசத்தில் ஷிப்சர் மாவட்டத்தில் இருந்து இன்று காலை 8 மணியளவில், சுமார் 40 பயணிகளுடன் சொகுசு பேருந்து புறப்பட்டு சென்றது. புதிதாக கட்டப்பட்ட அதிவிரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


இந்தக் கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 25 பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்த தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


