Homeதிருக்குறள்12 -  நடுவு நிலைமை

12 –  நடுவு நிலைமை

-

- Advertisement -

12 -  நடுவு நிலைமை, கலைஞர் குறல் விளக்கம் ,திருக்குறள்,

111. தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
        பாற்பட் டொழுகப் பெறின்.

கலைஞர் குறல் விளக்கம்  – பகைவர். அயலோர், நண்பர் எனப் பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக் கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.

112. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
         எச்சத்திற் கேமாப் புடைத்து.

கலைஞர் குறல் விளக்கம்  – நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை: அது,வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

113. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
        அன்றே யொழிய விடல்

கலைஞர் குறல் விளக்கம்   – நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும். அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

114. தக்கார் தகவிலர் என்ப தவரவர்
        எச்சத்தாற் காணப் படும்.

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப் போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

115. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
        கோடாமை சான்றோர்க் கணி.

கலைஞர் குறல் விளக்கம்  – ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.

116. கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
         நடுவொரீஇ அல்ல செயின்.

கலைஞர் குறல் விளக்கம்  – நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்துவிடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரிய வேண்டும்.

117. கெடுவாக வையா துலகம் நடுவாக
         நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

கலைஞர் குறல் விளக்கம்   – நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகக் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாக கருதாது.

118. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
        கோடாமை சான்றோர்க் கணி.

கலைஞர் குறல் விளக்கம்   – ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.

119. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
         உட்கோட்டம் இன்மை பெறின்.

கலைஞர் குறல் விளக்கம்   – நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தாள் நடுவுநிலைமை.

120. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
        பிறவும் தமபோல் செயின்.

கலைஞர் குறல் விளக்கம்   – பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

MUST READ