Homeதிருக்குறள்34 – நிலையாமை - கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

34 – நிலையாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

-

- Advertisement -

34 – நிலையாமை ,கலைஞர் குறல் விளக்கம்  , திருக்குறள்.

331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
        புல்லறி வாண்மை கடை

கலைஞர் குறல் விளக்கம்  – நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

332. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
        போக்கும் அதுவிளிந் தற்று

கலைஞர் குறல் விளக்கம்  – சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.

333. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
        அற்குப ஆங்கே செயல்

கலைஞர் குறல் விளக்கம்  – நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.

334. நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
       வாள துணர்வார்ப் பெறின்

கலைஞர் குறல் விளக்கம்  – வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.

335. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
        மேற்சென்று செய்யப் படும்

கலைஞர் குறல் விளக்கம்  – வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.

 336. நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
         பெருமை யுடைத்திவ் வுலகு

கலைஞர் குறல் விளக்கம்  – இந்த உலகமானது, நேற்று உயிருடன் இருந்தவரை இன்று இல்லாமல் செய்து விட்டோம் என்ற அகந்தையைப் பெருமையாகக் கொண்டதாகும்.

337. ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
        கோடியு மல்ல பல

கலைஞர் குறல் விளக்கம்  – ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றிய உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக்கோட்டைகள் கட்டுவார்கள்.

338. குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
        உடம்போ டுயிரிடை நட்பு

கலைஞர் குறல் விளக்கம்  – உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.

339. உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
       விழிப்பது போலும் பிறப்பு

கலைஞர் குறல் விளக்கம்  – நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு: திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.

340. புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
        துச்சி லிருந்த உயிர்க்கு

கலைஞர் குறல் விளக்கம்  – உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.

MUST READ