Homeதிருக்குறள்8 - அன்புடைமை

8 – அன்புடைமை

-

- Advertisement -

8 - அன்புடைமை,  கலைஞர் குறள் விளக்கம், திருக்குறள் , 71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
       புன்கணீர் பூசல் தரும்.

கலைஞர் குறல் விளக்கம்உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து,கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டு விடும்.

72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
      என்பும் உரியர் பிறர்க்கு.

கலைஞர் குறல் விளக்கம்அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

73. அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
      என்போ டியைந்த தொடர்பு.

கலைஞர் குறல் விளக்கம்உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

74. அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
       நண்பென்னும் நாடாச் சிறப்பு.

கலைஞர் குறல் விளக்கம்அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும், அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.

75. அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
       இன்புற்றார் எய்தும் சிறப்பு.

கலைஞர் குறல் விளக்கம்உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

76. அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
       மறத்திற்கும் அஃதே துணை.

கலைஞர் குறல் விளக்கம்வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணிையாக இருப்பதாகக் கூறுவார்கள்.

77. என்பி லதனை வெயில்போலக் காயுமே
      அன்பி லதனை அறம்.

கலைஞர் குறல் விளக்கம்அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காத வரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும், அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.

78. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
       வற்றல் மரந்தளிர்த் தற்று.

கலைஞர் குறல் விளக்கம்மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை,பாலை வானத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
      அகத்துறுப் பன்பி லவர்க்கு.

கலைஞர் குறல் விளக்கம்அன்பு எனும் அகத்து உறுப்பு இல்லாதவர்க்குப் புறத்து உறுப்புகள் அழகாக இருந்து என்ன பயன்?

80. அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
      என்புதோல் போர்த்த உடம்பு.

கலைஞர் குறல் விளக்கம்அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.

MUST READ