எடை போட்டு பார்த்து கொடுத்த வெற்றி- மு.க.ஸ்டாலின்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
சென்னை அறிவாலயத்திற்கு வந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் வெற்றியே தேடித் தந்திருக்கக் கூடிய அந்த தொகுதி வாக்காள பெருமக்களுக்கு திமுக சார்பில் இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தலில் பிரச்சாரத்தின் போது நான் தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவுக்கு தர வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோள் வைத்தேன். ஆகவே திராவிட மாடல் ஆட்சியை இன்னும் சிறப்போடு நடத்திட வேண்டும் என்று மக்கள் இந்த மிகப்பெரிய ஆதரவை இந்த இடைத்தேர்தலில் வழங்கியிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி இந்த இடைத்தேர்தலில் தன்னையே மறந்து ஒரு நாளாந்தர பேச்சாளரை போல் பேசிய பேச்சுக்கு மக்கள் இடைத்தேர்தல் மூலமாக நல்ல பாடத்தை வழங்கி இருக்கிறார்கள். குறிப்பாக 20 மாத கால திமுக-வின் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு அங்கீகாரம் தர வேண்டும் என்றும், இந்த தேர்தலை இடைத்தேர்தலாக மட்டுமில்லாமல் இந்த ஆட்சியை எடை போட்டு பார்க்கும் எடைத் தேர்தலாக பாருங்கள் என்றும் நான் தொடர்ந்து பிரச்சாரத்தில் எடுத்துச் சொன்னேன். ஆகவே மக்கள் எடை போட்டு இந்த ஆட்சிக்கு மேலும் வலுசேர்க்கின்ற வகையில் எடை தேர்தலில் நல்ல மதிப்பெண்ணை வழங்கி இருக்கிறார்கள் . வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தல் அமைந்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை தர வேண்டும்” எனக் கூறினார்.