ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயக்குனர் நெல்சன் திலிப் குமார் கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அதைத் தொடர்ந்து டாக்டர், பீஸ்ட் என பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கியிருந்தாலும் கடந்தாண்டு இவரது இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தான் இவருக்கு பிரம்மாண்ட வெற்றியை தந்தது. ரஜினி நடிப்பில் வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக நெல்சன் மீண்டும் ரஜினியை வைத்து ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் இவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி பிளடி பெக்கர் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரௌடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பொதுவெளியில் நடந்த இந்த கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரணை செய்து வருகிறது. இதுவரை இந்த வழக்கில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ரௌடி சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் சம்போ செந்திலின் நெருங்கிய கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் என்பவர் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. எனவே அவரது செல்ஃபோன் அழைப்புகளை ஆராய்ந்து பார்த்ததில் பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் மொட்டை கிருஷ்ணன் அடிக்கடி பேசியிருப்பது தெரியவந்துள்ளது. ஆகையினால் நெல்சனின் மனைவி மோனிஷாவிற்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்த கட்டமாக நெல்சனிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.