முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது அதிமுக புகார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு , தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் , சுயேச்சை கட்சி வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 2 லட்சத்தை 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்துள்ளனர். இதுதவிர 398 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, மகளிருக்கு ரூ.1000 குறித்து அறிவித்ததாக குறிப்பிட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட இடங்களில், பொதுமக்களை அடைத்து வைத்ததாகவும் புகார் கூறியுள்ளது. அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை இந்த புகாரை அளித்துள்ளார்.