ரயில்வே தொழிற் சங்க அங்கீகார தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில், வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்பீக்கருக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிசம்பர் 4, 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ரயில்வே தொழிற்சங்க தேர்தலுக்கான வாக்கு சேகரிக்கும் பணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க அமைப்பு இறங்கியுள்ளது. இதையொட்டி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் வாக்கு சேகரிக்கும் வகையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு, விடுதலை சிறுத்தைகளின் ரயில்வே தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் நட்சத்திர சின்னத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வாக்கு சேகரித்தார்.
பிரச்சார முறையில் அவர் பேசிக் கொண்டே இருந்த பொழுது, ஸ்பீக்கருக்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் திருமாவளவன் தனது உரையை சிறிது நேரம் நிறுத்த நேரிட்டது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழில் சங்க நிர்வாகிகள் முழக்கமிட்டு, பிரச்சனை எழுப்பினர், பின்னர் மீண்டும் இணைப்பு கொடுக்கப்பட்டு, திருமாவளவன் கூட்டத்தில் பேசினார்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், டிசம்பர் மாதம் 4, 5 மற்றும் 6ஆ-ம் தேதிகளில் நடத்தப்படும் ரயில்வே தொழிற்சங்க தேர்தலில் RLLF மற்றும் DREU கூட்டணிக்கு நட்சத்திர சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பாடுபடுவார்கள் என்று அவர் உறுதி அளித்தார். நட்சத்திர சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்ட திருமாவளவன், பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த இந்த கூட்டணி பாடுபடும் என்றும் அனைத்து அப்ரண்டீஸ் ஊழியர்களுக்கு ரயில்வே வேலை கிடைக்க உரியன செய்யப்படும் என்றும் திருமா உறுதி அளித்தார்.