2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். அதற்கு வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என பல கட்சிகளுக்கும் நூல் விட்டு பார்த்து காத்துக் கிடக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தயாராக இல்லை.
தமிழக அரசியல் கள நிலவரத்தைப் பார்க்கும் போது 2026ல் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிப்பது போல் தெரியவில்லை. அதிமுகவை ஒன்றிணைத்து தேர்தலை சந்தித்திப்பது மட்டுமே இக்கட்சியை காப்பாற்ற ஒரே வழி. அதற்கான சிறு துரும்பைக்கூட எடப்பாடி பழனிசாமி இன்றுவரை கிள்ளிப்போடவில்லை என தொடர்ச்சியாக எடுத்துரைத்து வருகிறார் மருது அழகுராஜ்!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ‘வலுவான கூட்டணி அமைப்பேன்’ என்றார் எடப்பாடி பழனிசாமி. ஆனால்,வலுவிழந்த கூட்டணியை அமைத்ததால் போட்டியிடுவதற்கே சீனியர்கள் பின்வாங்கிய நிலையில் புதியவர்களிடம் ‘விட்டமினை’ வாங்கிக்கொண்டு (போட்டியிட்டவர்கள் வாங்கிய கடனுக்கு இன்று வட்டியைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்) சீட் கொடுத்தார்.
ஜெயலலிதா, சசிகலா இருக்கும்போது முக்குலத்தோர் வாக்குகள் அப்படியே அ.தி.மு.க.விற்கு விழும். இது பற்றி கலைஞர் கருணாநிதியே வருத்தப்பட்டதுண்டு. ஆனால், இன்று எடப்பாடியின் சமுதாயமான கொங்கு மக்களின் வாக்குகளே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு விழாத நிலையில், 2026ல் எப்படி எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மருது அழகுராஜ்.
இது தொடர்பாக அவர், ‘அவசர சிகிச்சை’ என்ற தலைப்பில் ‘‘கவலைக்கிடமாய் இருக்கும் அ.தி.மு.க.விக்கான ஒரே அவசர சிகிச்சை அனைவரும் ஒன்றிணைவது மட்டும்தான்..!
அது கைகூடாது போனால் அ.தி.மு.க., ம.தி.மு.க.வாகும்..! த.வெ.க., அ.தி.மு.க.வாக மாறும்..!’’ என பதிவிட்டிருக்கிறார்! 2026ல் எடப்பாடி பழனிசாமி சுதாரிக்கா விட்டால், அதன் பிறகு அ.தி.மு.க. என்ற மாபெறும் இயக்கம் ம.தி.மு.க.வாக மாறுவதை எந்தவொரு தொண்டனின் மனசாட்சியும் ஏற்றுக்கொள்ளாது… எடப்பாடியின் மனசாட்சி ஏற்றுக்கொள்ளுமா…?
கட்டுத் தொகை காப்பாற்ற முடியாத கட்சியாகவும் ஒற்றுமை இல்லாத ஓட்டைப் படகாகவும் அதிமுகவை வைத்திருக்கும் நிலையை கண்டு
விசிக தவெக மட்டுமல்ல எடப்பாடியோடு கூட்டணி வைக்க மன்சூர் அலிகானுமே மறுப்பார் என்பது தான் உண்மை’’ எனத் தெரிவித்துள்ளார்.