அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் அதிமுகவினர் பதாகைகளை ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மாணவியின் முதல் தகவல் அறிக்கை சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்திருந்தார். அதேவேளையில், அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூ மாலில் அதிமுகவினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, யார் அந்த சார்? என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர், மாணவி பாலியல் வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.