ஓபிஎஸ் பேரவையில் பேச ஈபிஎஸ் தரப்பு எதிர்ப்பு
முதலமைச்சர் பேரவையில் தாக்கல் செய்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆதரித்து சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசினார். இதனை தொடர்ந்து அதிமுக சார்பில் மசோதாவை வரவேற்பதாக ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டு பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஒரு கட்சிக்கு ஒருவர் மட்டுமே பேச அனுமதி என கூறிவிட்டு பெரும்பான்மை இல்லாதவரை பேச அனுமதித்தது எப்படி? என எடப்பாடி பழனிசாமி தரப்பு கேள்வி எழுப்பியது.

முக்கிய மசோதா என்பதால் முன்னாள் முதலமைச்சர் என்ற முறைஉஇல் ஓ.பன்னீர்செல்வம் பேச வாய்ப்பு அளித்ததாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், அதிமுக வெளிநடப்பு செய்தது. ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிமுக சார்பாக பேச அனுமதி கொடுத்த சபாநாயகரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி வாக்குவாதம் செய்தார். பின்னர் அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.