பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து பின்னர் தான் எம்ஜிஆரும், கலைஞரும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவக்குமார் தெரிவித்தார்.
சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீ வரலட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் கொங்கு எக்ஸ்போ திருவிழா என்ற கண்காட்சி இன்று காலை தொடங்கியது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சிவகுமார் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பல்வேறு சாதனைகள் மற்றும் சிறப்பான சேவை ஆற்றிய 30க்கும் மேற்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை நடிகர் சிவகுமார் வழங்கி பாராட்டினார். பின்னர் நடிகர் சிவகுமாரின் தீவிர ரசிகரான சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பெருமாள், சிவக்குமாருக்கு ரோஜா பூ மாலை அணிவித்து வாழ்த்திய போது சிவக்குமார் கண்கலங்கினார். பிறகு சிவக்குமார் மாற்றுத்திறனாளிக்கு கையெழுத்து போட்டு டைரி ஒன்றும் வழங்கினார்.
அப்போது பேசிய மாற்றுத்திறனாளி பெருமாள், ஒழுக்கம் தான் முக்கியம். அப்படி வாழ்ந்த சிவக்குமாருக்கு சாவே கிடையாது. அவர் பல்லாண்டு வாழ வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசினார். இதனைதொடர்ந்து மூத்த நடிகர் சிவக்குமார் சிறப்புரையாற்றி பேசும்போது, கஷ்டப்பட்டால் தான் பலன் கிடைக்கும். இதற்கு நிறைய உதாரணம் கூறலாம். 1946 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் முதன்முறையாக ராஜகுமாரியில் நடித்தார். இந்தப் படத்திற்கு கலைஞர் வசனம் எழுதியிருந்தார்.
வசனம் எழுதி சரித்திரம் படைத்தவர் கலைஞர் கருணாநிதி. இதுபோல நடிகர் எம் ஜி ஆர் சாதனை படைத்தவர். உலக அளவில் நாட்டை ஆண்ட ஒரே நடிகர் எம் ஜி ஆர் மட்டும் தான். முதல்முறையாக எம்ஜிஆர் நடிக்க வந்த போது முதல் நாள் நடிக்க அழைக்கவில்லை. இரண்டாம் நாளும் அழைக்கவில்லை. இது போல 17 நாட்கள் காவலர் மேக்கப் போட்டு காத்திருந்தார். ஆனால் அவரை நடிக்க அழைக்கவில்லை.
18 வது நாள் போலீஸ் உடையில் இருந்த எம்ஜிஆரை நடிக்க கூப்பிட்டனர். அப்போது அந்த காட்சியில் சைக்கிள் தள்ளி கொண்டு எம் ஜி ஆர் போவது போல இருக்க வேண்டும். சைக்கிள் எங்கே என்று எம்ஜிஆரிடம் கேட்டனர். என்னிடம் சைக்கிள் இல்லை என்று கூறிய எம்ஜிஆர், தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என கருதி , அருகில் ரோட்டிற்கு சென்று அங்கு நிறுத்தி இருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தார். அப்போது சைக்கிளுக்கு உரியவர், அங்கு வந்து சைக்கிள் திருடி வந்ததாக கூறிவிட்டார்.
இதனால் பயந்த எம்ஜிஆர், சைக்கிள்காரரிடம் சென்று 17 நாள் காத்துக் கிடந்து, இப்போது தான் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனவே கொஞ்ச நேரம் சைக்கிள் தாருங்கள் எனக் கேட்டு, மீண்டும் நடித்தார். அந்த சைக்கிள் கொடுத்தவர் வேறு யாரும் இல்லை பராசக்தி படத்தை தயாரித்த கிருஷ்ணன் தான். அந்த அளவிற்கு எம்ஜிஆர் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்.
37 வருடம் கஷ்டப்பட்ட பின்னரே எம்ஜிஆர் நல்ல நிலைக்கு வந்தார் . அவரது முதல் மனைவி உடல் நில பாதிக்கப்பட்டிருந்ததால், குடும்ப வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டார். பின்னர் மலைக்கள்ளன், அலிபாபாவும் 40 திருடர்கள், நாடோடி மன்னன் போன்ற படங்கள் மூலம் வெற்றி பெற்றார்.
பல்வேறு துன்பங்களை கடந்து தான் எம்ஜிஆர் முன்னுக்கு வந்து நாட்டை ஆண்டார். அதுபோல சிவாஜியும் கஷ்டப்பட்டு இருக்கிறார். கலைஞர் கருணாநிதியும் பல்வேறு கஷ்டங்களை கடந்து வந்தவர். தனது வயது மூப்பில் மிகவும் முடியாத நிலையில் கலைஞர் இருந்த போது, அவரை சந்திக்க சென்றேன், அப்போது கலைஞரை சேரில் அமர வைத்திருந்தனர். கழுத்துப் பகுதியில் துளை போட்டு அதன் மூலம் உணவு கொடுக்கப்பட்டதால், அவர்கள் பேச முடியாமல் இருந்தார்.
அப்போது டேப்ரெக்கார்டர் மூலம் , கலைஞர் எழுதிய 1954 ம் ஆண்டு மனோகரா படத்தின் வசனத்தை அதிக சத்தத்துடன் போட்டு காட்டினோம் என அந்த வசனத்தை அப்படியே சிவகுமார் மேடையில் பேசி காட்டிய அவர் , இந்த வசனத்தை கேட்டவுடன் கலைஞர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. பின்னர் அவரிடம் ஆசி பெற்று திரும்பி வந்தேன்.
இப்படி எம்ஜிஆரும், கலைஞரும் பல்வேறு கஷ்டங்களை கடந்து தான் முன்னுக்கு வந்தனர் என்று நடிகர் சிவகுமார் அவர்கள் தனக்கே உரிய பாணியில் உருக்கமாக பேசிய அவர், இறுதியாக மனைவிக்கு யார் சேவை செய்கிறார்களோ, அவர்கள் தான் உயர்ந்த நிலையை அடைய முடியும் , எனவே மனைவிக்கு உதவுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .