கவுண்டமணியின் மனைவி உடலுக்கு சத்யராஜ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் எண்பது காலகட்டத்தில் காமெடி கிங் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர் கவுண்டமணி. இவர் கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்து பெயர் பெற்றவர். அதே சமயம் சுமார் 10 படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இவருடைய டைமிங் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் இவரும் – செந்திலும் இணைந்து அடிக்கும் லூட்டியை பற்றி சொல்லவே வேண்டாம். இவ்வாறு திரைத்துறையில் கொடி கட்டி பறந்த இவர் பல வருடங்களுக்கு பிறகு ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில் இவர் கடந்த 1963ஆம் ஆண்டு சாந்தி என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு செல்வி மற்றும் சுமித்ரா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தான் 67 வயதுடைய கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (மே 5) காலையில் உயிரிழந்தார். கவுண்டமணியின் மனைவி சாந்தியின் உடல், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. சாந்தியின் மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கவுண்டமணியுடன் இணைந்து பல படங்களில் நடித்த சத்யராஜும், சாந்தியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன் கவுண்டமணிக்கும் தனது ஆறுதலை தெரிவித்துள்ளார் சத்யராஜ்.