சென்னை உயர்நீதிமன்றத்தில் பட்டு தேவானந்த் பதவியேற்றார்.
அம்பேத்கர் மற்றும் பெரியார் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் அரசியல் சாசனம் வகுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளதாக
ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணிமாற்றம் செய்து கடந்த மார்ச் 23ம் தேதி குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பட்டு தேவானந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இவருடன் சேர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. இன்னும் 14 நீதிபதிகள் பதவிகள் காலியாக உள்ளன.
உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில், புதிய நீதிபதியை வரவேற்றுப் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினத்தில் பிறந்த நீதிபதி பட்டு தேவானந்த், உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் கண்ணியம் உண்டு என தீர்ப்பளித்துள்ளார் என பாராட்டி பேசினார்.
பின்னர் ஏற்புரையாற்றிய நீதிபதி பட்டு தேவானந்த், அம்பேத்கர் மற்றும் பெரியார் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் அரசியல் சாசனம் வகுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும், நாட்டில் பல சட்டங்கள் வகுக்க சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த சட்ட வல்லுனர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், தீர்ப்புகள் வழங்குவது மட்டும் நீதிபதிகளின் கடமையல்ல எனவும், அதனை அமல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, அமல்படுத்தாத தீர்ப்புகள் வெறும் காகிதங்கள் தான் எனவும் தெரிவித்தார்.
ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடாவில் 1966ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்த பட்டு தேவானந்த், ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து, 1989ம் ஆண்டு வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார்.
ஆந்திரா அரசின் அரசு பிளீடராக பணியாற்றிய அவர், 2020ம் ஆண்டு ஆந்திரா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.