அக்னி நட்சத்திர காலம் முடிந்தும் கோடை காலம் போல வெயில் சுட்டெரித்து வருகிறது..உடல் வறட்சியை தடுத்து சருமத்தை பராமரிக்க சில ஆரோக்கியமான பானங்களை குடிக்க வேண்டும். கோடை காலத்தில் ஆரோக்கியத்தை பராமரிக்க மோர், எலுமிச்சை நன்னாரி சர்பத், நுங்கு பதனீர், இளநீர், பானகம் என இயற்கை அளித்துள்ள பானங்கள் ஏராளமாக உள்ளன.
கிராமங்களில் இன்றைக்கும் பல வீடுகளில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு முதலில் தண்ணீர் கொடுத்து விட்டு பின்னர் மோர் கொடுப்பார்கள். விருந்தோம்பலில் முக்கிய இடம் பிடிக்கும் மோர் பல சத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதே போல பானகமும் எளிதாக நம்முடைய வீட்டிலேயே தயாரிக்கும் பானம்தான்.
நீர் மோர்
கோடை காலத்தில் பலருக்கும் உடம்பு சூடாகும். காரணம் உஷ்ணத்தின் தாக்கம்தான். மழை காலத்தில் சருமம் வறட்சியாகும். செயற்கை குளிர் பானங்களை அதிக விலை கொடுத்து சாப்பிடுவதை விட எளிமையான இயற்கை குளிர்பானங்களான வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய மோர், பானகம் போன்றவைகளை குடிக்க உடல் உஷ்ணம் கட்டுப்படும். சருமமும் பளபளப்பாகும். கெட்டி தயிரில் நிறைய தண்ணீர் கலந்து கொஞ்சம் உப்பு, தேவையான அளவு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தயாரிக்கப்படும் நீர் மோர் நம்முடைய உடம்பில் நீர் சமநிலையை பராமரித்து நீர் இழப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
தினமும் மோர் அருந்துவது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மோரில் உள்ள லாக்டிக் அமிலம் நமது சருமத்திற்கு நல்லது. கோடை காலத்தில் மட்டுமல்லாது மழைக்காலத்திலும் வறட்சி இன்றி சருமத்தை பளபளப்பாக வைக்க மோர் உதவுகிறது. தினமும் மோர் குடிப்பதால் வயிற்றில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து தப்பிக்கலாம். மோரில் உள்ள புரோபயாடிக்குகள் நமது செரிமானத்தை சீராக வைத்து, நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. மோர் குடிப்பதன் மூலம் கோடை காலத்தில் உடம்பில் நீர் சத்து குறைவது தடுக்கப்படும்.
பானகம்
கிராமங்களிலும் நகரங்களிலும் திருவிழா நேரங்களில் பால்குடம் எடுத்துக்கொண்டு வருபவர்களுக்கு பானகம் கொடுப்பார்கள். பானகம் என்பது இனிப்பு, புளிப்புச் சுவையோடு, லேசான காரம் சேர்க்கப்பட்ட ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு போன்ற பொருட்கள் எல்லாம் சேர்த்து, தயாரிக்கப்படுகிற பானம். சில நேரங்களில் எலுமிச்சை பானகமும் தயார் செய்வார்கள்.
வெயிலில் அலைந்து விட்டு திரிந்து வருபவர்கள் பானகம் குடிப்பதன் மூலம் உடனடி ஆற்றல் கிடைக்கும். கோடை வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும் களைப்பையும் பானகம் நீக்கும். ஜீரணத்தை அதிகரிக்கும். நாவறட்சியைப் போக்கும் என்பதலேயே நம்முடைய முன்னோர்கள் பானகம் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.