அண்ணாமலை தமிழ்நாட்டிற்குள் தான் நமது அரசியல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். பாஜக இல்லாவிட்டாலும் தனிப்பட்ட தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும் என அதற்கான வேலைகளை செய்து வருகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி இல்லை. பாஜக ஆட்சிதான் நடைபெறும் அண்ணாமலை சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதன் பின்னனணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- செய்தியாளர் சந்திப்பின்போது கூட்டணி ஆட்சி குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று செல்ல மாட்டேன், பாஜக ஆட்சிதான் வரும் என தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமை ஒரு முடிவு எடுக்கிறது. அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டியது கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் கடமையாகும். பிடிக்காவிட்டால் ஒதுங்கி இருப்பது இயல்பான ஒரு விஷயமாகும்.
நீங்கள் அதிருப்தி குரலை வெளிப் படுத்தினால் அது கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயலாகும். அண்ணாமலை இந்த கருத்தை சொல்ல வேண்டி தேவையே இல்லை. ஏனென்றால் கட்சி தலைமை ஒரு முடிவை எடுத்துவிட்டது. கூட்டணிக்கு தலைமை அதிமுக சொல்லிவிட்டார்கள். இருக்கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஆட்சி தொடர்பாக கருத்து வேறுபாடு உள்ளன. பாஜக நடந்துகொள்வது சரியில்லை. அமித்ஷா பேசியது சரியில்லை என்று அதிமுகவில் ஒரு கசப்புணர்வு உள்ளது. பாஜகவுக்கு அதிமுக கூட்டணியை விட்டால் வேறு வழியில்லை என்கிற நிலைமை உள்ளது. அப்படி இருக்கிற நிலையில், அண்ணாமலை இடையில் புகுந்து ஒரு கல்லைப் போடுகிறார்.
அண்ணாமலையிடம் இப்போது அதை யார் கேட்டது? அவர் பாஜகவின் வெறும் தொண்டர்தான். பழைய மாநிலத் தலைவர் என்கிற முறையில் தலைமை சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். இதை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? உங்களின் தனிப்பட்ட கருத்துக்கு இங்கே எங்கே இடமிருக்கிறது. அண்ணாமலை தனிப்பட்ட முறையில் தன்னை வளர்த்துக்கொள்கிறார். பாஜக மாநில தலைவராக இருந்தபோது அண்ணாமலை ஒரு குரூப்பை வளர்த்தார். வார் ரூம் எல்லாம் வைத்து ஆதரவாளர்களை திரட்டியுள்ளார். ஏதோ பாஜகவில் இளைஞர்களின் குரலை அண்ணாமலை தான் பிரதிபலிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார்.
பரபரப்புக்காக பொய்யும், உண்மையும் கலந்து பலவற்றை அண்ணாமலை பேசியுள்ளார். தனது அரசியல் எதிரிகளை வீழ்த்த பல விதமான வழிமுறைகளை அவர் காண்டிருக்கிறார். உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தே பல வித விமர்சனங்கள் எழுந்துள்ளன. அண்ணாமலையின் வீட்டு வாடகையை நண்பர் கொடுப்பதாக சொல்கிறார். ஆளுங்கட்சியின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு வீட்டு வாடகையாக மாதம் 3 லட்சம் ஏன் அவர் தர வேண்டும். யார் அவர்? அப்போது அவருக்கு பதிலுக்கு நீங்க என்ன செய்தீர்கள் என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. நீங்களே நியாயமாக செயல்படவில்லையே.
அதிமுகவை ஊழல் கட்சி என்று கடந்த காலங்களில் அண்ணாமலை சொல்லியுள்ளார். அந்த கட்சியோடு கூட்டணி வைத்தது உங்களுக்கு பிடிக்காமல் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது பாஜகவை தனித்து வளர்ப்பது உங்கள் எண்ணமாக இருக்கலாம். ஆனால் அரசியல் ரீதியாக பாஜக தலைமை ஒரு முடிவு எடுத்திருக்கிறபோது, நீங்கள் தனி ஆவர்த்தனம் வாசிக்க வேண்டிய அவசியம் என்ன? அப்போது நீங்கள் ஏதோ ஒரு முடிவில் இருக்கிறீர்கள். எதிர்வரும் நாட்களில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை பேசி, கட்சியே அவரை வெளியேற்ற வேண்டிய சூழலை ஏற்படுத்துவார் என்று நினைக்கிறேன். கட்சியில் தேசிய அளவிலான பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்படும் என்று சொல்லப் பட்டது. ஆனால், அதில் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு விருப்பம் கிடையாது. அப்படியே தமிழ்நாட்டு அரசியலில் இருந்து வெளியேற்றி வடஇந்தியாவில் பணியாற்ற சொன்னால், அதில் அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் தனது இருப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
பாஜகவில் இருந்துகொண்டோ, அல்லது பாஜகவில் இல்லாமலேயே தமிழ்நாட்டில் ஒரு தனிப் பெருந்தலைவராக வர வேண்டும் என்று அண்ணாமலை விரும்புகிறார். எதிர்வரும் மாதங்களில் அண்ணாமலை அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை பேசுவார். அதனால் பாஜகவே அவரை வெளியே அனுப்பும். அப்படி இல்லாவிட்டால் அவரே பாஜகவில் இருந்து வெளியேறுவார். அடுத்தக்கட்டமாக சீமானோடு சேருவார். அல்லது தனியொரு கட்சியை தொடங்குவார். அண்ணாமலையின் நீண்ட காலத் திட்டம் என்பது தமிழ்நாட்டில் ஒரு அரசியல் தலைவராக உருவெடுக்க வேண்டும் என்பதுதான். அதற்கு ஏற்றவாறுதான் அவர் காய்களை நகர்த்துகிறார். நயினார் மாநில தலைவராக வந்த பிறகும் கூட அண்ணாமலைதான் ஊடகங்களில் முன்னாள் நிற்கிறார். அவர் வார் ரூம் இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். அண்ணாமலையின் பேச்சு என்பது அதிமுக – பாஜக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணி இன்னும் ஜெல் ஆகவில்லை. கூட்டணி அமைத்தால் இரு கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். மதுரையில் பேசிய அமித்ஷா, கூட்டணி ஆட்சி அமையும் என்று சொல்லியுள்ளார். அவர்கள் தொடர்ந்து கூட்டணி ஆட்சி என்றுதான் சொல்லி வருகிறார்கள். எடப்பாடி தான் அதை மறுத்தார். தற்போது அவர் மறுப்பு தெரிவிக்க யோசிக்கிறார். 50 தொகுதிகளை தேர்வு செய்து, வேலை செய்யுங்கள் என்று அமித்ஷா கூறியுள்ளார். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அதிமுக தான் இடங்களை பிரித்து வழங்க வேண்டும். அப்படி இருக்கும்போது நீங்கள் ஏன் முன்கூட்டியே தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறீர்கள். இதேபோல், பாமக, தேமுதிக கட்சிகள் இடங்களை கேட்டால் அதிமுக போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை குறையுமல்லவா? அப்போது பெரும்பான்மை பெறுவதற்கான இடங்கள் குறையும். அதனால் பாஜக, இந்த கூட்டணியை கூட்டணி ஆட்சிக்குதான் எடுத்துக் கொண்டு செல்கிறார்கள் என்கிற முடிவில் பாஜக உள்ளது தெரிகிறது.
அண்ணாமலையை தற்போது பதவியில் இருந்து நீக்கிவிட்டார்கள். அவர் அடிபட்ட புலியை போல உள்ளார். அவர் மனதில் பல அழுத்தங்கள் இருக்கும். அதை பல்வேறு விதங்களில் அண்ணாமலை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். அது முற்றிலும் கட்சிக்கு விரோதமாக போய், அண்ணாமலையை வெளியே அனுப்புகிற சூழல் எவ்வளவு சீக்கிரம் வரும் என்று தெரியவில்லை. அதற்குள்ளாக எடப்பாடி பழனிசாமி,பாஜக கூட்டணியில் இருந்து வெளியே போய்விட்டார் என்றால் உடனடியாக அண்ணாலையை தலைவராக ஆக்க மாட்டார்கள். அப்போதும் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கி தக்க வைக்காவிட்டால் அவர் வெளியே போவது உறுதியாகும்.
அண்ணாமலைக்கு தென் மண்டல பாஜக ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு தருவதாக அமித்ஷா சொன்னார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் தான் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என்று அமித்ஷா டிவிட் போட்டார். அதன் பிறகே எடப்பாடி, அமித்ஷா சென்று சந்தித்தார். அண்ணாமலை தமிழ்நாட்டிற்குள் அரசியல் செய்யக்கூடாது என்பதில் எடப்பாடி தெளிவாக உள்ளார். அண்ணாமலை தமிழ்நாட்டிற்குள்தான் நமது அரசியல் என்று நினைக்கிறார். ஒன்று தமிழக பாஜகவின் தலைமைப் பொறுப்பில் நாம் இருக்க வேண்டும். அல்லது பாஜக இல்லாவிட்டாலும் பரவாயில்லை தனிப்பட்ட தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும். அதற்கான வேலைகளுக்காக தான் அண்ணாமலை பணியாற்றி கொண்டிருக்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.