சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த மே மாத மத்தியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் அக்னி நட்சத்திரத்தின் அனலை உணர முடியாத அளவிற்கு மழை பெய்தது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மழை பெய்தாலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்தாலம் அனல் காற்று மாறவில்லை. இந்த நிலையில் மழை நிலவரம் எப்படி இருக்கிறது என வானிலை நிலவரத்தை பார்க்கலாம்.
தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதியும், குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியும் உருவாகி இருக்கிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை மழை முதல் மிக கனமழை வரை பெய்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் கடந்த 16ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஜூன் 17ஆம் தேதி காலை 05.30 மணி அளவில், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்.
இதே போல 16ஆம் தேதி தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஜூன் 16ஆம் காலை 05.30 மணி அளவில், குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த ஒரு தாழ்வுப்பகுதி உருவாகி, காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும்.
ஜூன் 18ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளைய தினம் 19-06-2025 முதல் 23-06-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.