சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்கான பயிற்சி நிகழ்வை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கப்பட்டுள்ள இந்த பயிற்சியின் மூலம், சென்னை மாநகராட்சி பள்ளியில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீரர்கள் தலா 30 பேருக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதில் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்படவிருப்பது, குறிப்பிடதக்கது.பயிற்சிக்கான தொடக்க நிகழ்வில் கிரிக்கெட் வீரர் அஷ்வின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து மற்றும் கிரிக்கெட் பயிற்சி வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதற்குரிய உபகரணங்களை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட மைதானத்தை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டதுடன் அஷ்வினின் பந்துவீச்சை உதயநிதி எதிர்கொண்டு பேட் செய்தார்.
தொடர்ந்து உரையாற்றிய இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின், கிரிக்கெட் விளையாட ஆர்வமுள்ள சிறுவர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் சிரமம் உள்ளது என்றார். தற்போது ஏழை மாணவர்களும் சிறந்த கிரிக்கெட் பயிற்சியை பெறுவதற்கான வாய்ப்பு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் சாத்தியமாகியுள்ளது. என்றும் இந்த பயிற்சியின் மூலம் அரசு பள்ளி மாணவர்களும் இந்திய கிரிக்கெட் அணியிலோ அல்லது ஐ.பி.எல். அணிகளிலோ விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதென்றும் பேசினார்.
இவ்விழாவில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆண்களை விட பெண்களுக்கு விளையாட்டுத்துறையில் சாதிக்கும் ஆர்வம் உள்ளது என்றார். இதற்கான பயிற்சி வழங்க முன்வந்துள்ள அஷ்வினுக்கு அவர் நன்றியை தெரிவிப்பதாக கூறினார். சி.எஸ்.கே. மற்றும் ஆர்.ஆர். அணிகள் மோதும் போட்டி நடைபெறும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் அஷ்வின் பங்கேற்றதற்கு உதயநிதி நன்றி பாராட்டினார். சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக அஷ்வின் விக்கெட் எடுத்தாலும் தமிழ்நாடு வீரர் என்ற முறையில் அவரை பாராட்டுவோம் என உதயநிதி குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர் உதயநிதி, மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.