நடிகர் அமீர்கான் ‘கூலி’ படத்தில் நடித்தது நான் செய்த மிஸ்டேக் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இதன் இசையமைப்பாளராக பணியாற்றி இருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், ரச்சிதா ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அமீர்கான், உபேந்திரா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தில் சில லாஜிக் மிஸ்டேக்குகள் இருப்பதால் இப்படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் லோகேஷ் கனகராஜை பலரும் ட்ரோல் செய்து வந்தனர். இது தவிர படத்தின் கிளைமாக்ஸில் என்ட்ரி கொடுத்த அமீர்கானையும் ட்ரோல் செய்தனர். பாலிவுட்டில் எவ்வளவு பெரிய நடிகர் அவரை இப்படி பண்ணிட்டீங்களே… என்று ஒரு பக்கமும், அமீர்கான் இந்த படத்தில் பீடியை பற்றி மட்டுமே பேசுகிறார். அவருடைய கேமியோ இந்த படத்திற்கு எதற்கு? என்று மற்றொரு பக்கமும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அமீர்கான், “கூலி படத்தில் நடித்தது நான் செய்த மிஸ்டேக். ரஜினி சாருக்காக மட்டும்தான் அந்த படத்தில் நடித்தேன். மற்றபடி அந்தக் கதையில் நான் தலையிடாததால் அது இறுதியில் எப்படி வரும் என்று கூட எனக்கு தெரியாது. இனி இதுபோன்ற கேரக்டரில் நடிக்கும்போது கவனமாக இருப்பேன்” என்று அமீர்கான் கூறியதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இருப்பினும் அமீர்கான் இப்படி சொல்லி இருப்பாரா? என்பது போன்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் அமீர்கான் எந்த ஒரு பேட்டியிலும் இதை சொல்லவில்லை என்றும், கூலி படத்தில் நடித்ததால்தான் ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற அமீர்கானின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அமீர்கான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார் என்றும் இந்த செய்தி வெறும் வதந்தி என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.