விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடுர் மற்றும் வழுதாவூரில் 2,000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வீடூர் மற்ரும் வழுதாவூரில் , திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் அகழாய்வில் ஈடுபட்டனர். வரலாற்று பேராசிரியர் மாயகிருஷ்ணன் மற்றும் கோவிந்தசாமி அரசுக் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வாளர் ஜெயபிரதா ஆகியோர் வீடுர் பகுதியில் களவு ஆய்வு மேற்கொண்ட போது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால பொருட்களை கண்டெடுத்துள்ளனர். சங்க காலத்தில் நெசவுத் தொழில் சிறப்பாக வளர்ந்திருந்ததை காணும் விதமாகவும் நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட சுடுமண்ணால் ஆன கோள வடிவில் செய்யபட்ட துளை வடிவம் கொண்ட தக்களி, சுடுமன் பானை ஓடுகள், செம்பினால் ஆன அஞ்சனக்கோல் ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர்.


இந்த அஞ்சனக்கோல் 4.5, 4.8, 8.7 என உயரம் கொண்டவைகளாக கிடைத்துள்ளன. சங்ககாலத்தில் பருத்தி, எலிமயிர் மற்றும் பட்டு நூலிலிருந்து ஆடைகள் நெய்யப்பட்டது என்பதும், நெசவுத் தொழில் வீடுகள்தோறும் நடைபெற்ற ஒரு சிறு தொழிலாக செய்யப்பட்டதற்கு ஆதாரமாக இவை கிடைக்கப்பெற்றுள்ளன. அதே போன்று அஞ்சனக்கோல் என்பது கண்ணுக்கு மை தீட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இது பெரும்பாலும் மெல்லிய உலோகக் கம்பியாக இருக்கும். அஞ்சனக் கோல் மற்றும் அஞ்சனச் சலாகை என்றும் அழைக்கப்படுகிறது. அத்துடன் பண்டைய காலத்தில் பொன், வெள்ளி, செம்பு அல்லது இரும்பு போன்ற உலோகங்களில் செய்யப்பட்டிருந்தது.
மேலும் வழுதாவூரில் சங்ககால மணிகள் செய்வதற்கு தொழிற்சாலை இருந்ததற்கான ஆதாரமாக மணி செய்யும் மூலப்பொருட்கள் மணிகள், மணி கோர்க்கும் ஊசிகள் கிடைக்கபெற்றுள்ளன. கருப்பு சிவப்பு,மஞ்சள், பச்சை, நீலம் ,போன்ற நிறங்களில் கிடைக்கப்பெற்ற மணிகள் சங்ககாலத்தில் சிதம்பரம் மணிக்கொல்லையில் தொழிற்சாலை இருந்தது போல இங்கேயும் கிடைக்கப்பெற்றுள்ளன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் வீடுர் மற்றும் வழுதாவூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டுமென வரலாற்று ஆய்வாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.



