‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் நடிகர் ரியோ ராஜ், ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தவர் ரியோ ராஜ். இவர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எனும் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு வெளியான ‘ஜோ’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதேசமயம் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. கலையரசன் தங்கவேல் இயக்கியிருந்த இந்த படம் ஆண்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படம் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவதோடு, வசூலையும் அள்ளி திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி, ரியோ ராஜுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியவும் காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் ரியோ ராஜ் கிட்டத்தட்ட நான்கு படங்களில் கமிட்டாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் ஒரு படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும், மற்றொரு படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இது தவிர ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்திலும் கமிட்டாகி உள்ளாராம் ரியோ ராஜ். அனேகமாக இந்த படம் தான் இவருடைய அடுத்த படமாக இருக்கும் என்றும் இதனை அறிமுக இயக்குனர் ராம் என்பவர் இயக்க உள்ளார் என்றும் பேச்சு அடிபடுகிறது. எனவே இனிவரும் நாட்களில் மற்ற தகவல்களும், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


