அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று அதிகாலை சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைகளால் தயாரிக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் கொண்ட நன்னாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். அதன்படி, இன்று நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலை 4.40க்கு 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் சார்த்தப்பட்டன. சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு இன்று காலை 11 மணியளவில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. இதில், எண்ணெய், சிகைக்காய், 5,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெறும். வெற்றிலை மாலை அணிவித்து சொர்ண அபிசேகம், பின்னர் துளசி, ரோஜா, மல்லிகை, தாமரை உள்ளிட்ட பல்வேறு நறுமணமிக்க மலர்கள் கொண்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெறும். 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு பகல் 1 மணிக்கு, உடல் முழுவதும் தங்கக் கவசம் சார்த்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மாலையில், ஆஞ்சநேயருக்கு புதிய முத்தங்கி அலங்காரம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் நாமக்கல் கோட்டை சாலை பகுதி மூடப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது. இவ்விழாவுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


